மனிதன் ஒரு ஜீவப்பிராணியே உருப்புகளின் அமைப்புக்குத் தக்கபடியே பகுத்தறிவு - தோழர் ஈ.வெ.ராமசாமி. குடி அரசு - கட்டுரை – 03.09.1933 

Rate this item
(0 votes)

உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிகளும் தன் தன் சரீரத்தில் பற்றுக் கொண்டவைகளாவே இருந்துவருகின்றன. அந்தச் சரீரப்பற்று என்பது சரீரமானது ஜீவித்திருப்பதற்கு ஆதாரமானது என்கிற தத்துவத்தினாலேயே ஏற்பட்டதாகும். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்காத ஜீவன் கிடையவே கிடையாதெனலாம். ஆனால் எல்லா ஜீவராசிகளும் என்றைக்காவது ஒரு நாள் ஜீவிப்பற்று செத்தே போகும் என்பது மாத்திரம் அனுபவ சித்தாந்தமாகும். 

உலகிலுள்ள மற்ற எல்லா ஜீவராசிகளைப்போலவே மனிதவர்க்கம் என்னும் ஜீவராசியும் ஒன்றாகும். ஒரு மனிதனும் ஒரு யானையும் ஒரு எறும்பும் ஒருசிறு பேனும் பூதக் கண்ணாடி மூலம் பார்த்தரியத் தக்க அதி நுட்பமான ஒரு கிருமியும் எல்லாம் ஒரே தத்துவத்தைக் கொண்ட ஜீவ ராசிகளாகும். 

ஆனால் அவை தோற்றத்திலும் செயலிலும் வேறுபட்டிருக்கலாம். அப்படியானால் மனிதனுக்கும் கழுதைக்கும் வித்தியாசமில்லையா?” என்று ஒருவர் கேட்கலாம். ஜீவ தத்துவத்தில் வித்தியாசமில்லை என்றுதான் பதில் சொல்லுவேன். ஏதாவது வித்தியாசம் உண்டு என்று சொல்லவேண்டு மானால், ஒரு நாய் ஜீவனுக்கும் ஒரு கழுதை ஜீவனுக்கும் என்னவிதமான வித்தியாசமோ அந்தவிதமான வித்தியாசந்தான் உண்டு என்று சொல்லலாம். ஆனால் அவ்வித்தியாசம் அளவில் (டிக்கிரியில்) ஜாஸ்தியாகவோ, கம்மி யாகவோ இருக்கலாம் என்று தான் கொள்ளவேண்டும். 

இன்னும் பேசப்போனால் தாவரவர்க்கங்களும் ஜீவவர்க்கங்களுங் கூடதத்துவத்தில், அதாவது உற்பத்தி தத்துவத்திலும், வாழ்வு தத்துவத்திலும், அழிவு தத்துவத்திலும், ஒரே தத்துவத்தை ஆதாரமாய்க் கொண்டு இருந்து வருகின்றன என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. 

 

வித்தின்மூலம் எப்படி மரம் செடிகள் புல்பூண்டுகள் உற்பத்தியாகின்றனவோ, அதுபோல ஆண்-பெண் சேர்க்கையில் விந்து மூலம் ஜீவப் பிராணிகள் உற்பத்தியாகின்றன. வித்தில்லாமல் எப்படி சில தாவர வர்க்கங்கள் உற்பத்தியாகின்றனவோ அதுபோல் தான் ஆண் பெண் சேர்க்கை யில்லாமல் பல ஜீவ வர்க்கங்களும் உற்பத்தியாகின்றன. 

தாவரவர்க்கங்களில் ஒன்றுக்கொன்று வித்தியாசமும், மாறுபட்ட சக்தியும் இருப்பதுபோலவே ஜீவவர்க்கத்தினிடமும் ஒன்றுக்கொன்று வித்தியாசமும், மாறுபட்ட சக்தியும் இருந்துவருகின்றது. 

மனித ஜீவவர்க்கத்தினிடமுள்ள சில குணங்கள் எப்படி மற்ற ஜீவராசிகளுக்கு இல்லையோ, அதுபோன்றே மற்ற ஜீவராசிகளுக்கு உள்ள சில குணங்கள் மனித ஜீவ வர்க்கத்திற்கு இல்லாமல் இருப்பதை நாம் பார்க்கின்றோம். 

ஒரு கழுதைக்கும். ஒரு குரங்குக்கும் உள்ள வித்தியாசத்தைக் கணக்குப் பார்த்து, ஒரு குரங்குக்கும் ஒரு மனிதனுக்கும் உள்ள வித்தியாசத் துடன் ஒப்பிட்டுப் பார்ப்போமானால் பின்கண்ட வித்தியாசத்தின் அளவு அதிகமாய்க் காணமுடியாது. 

ஆகவே மனித ஜீவன் ஜீவப்பிராணிகளிலெல்லாம் மேலானதென்றும் -தனிப்பட்டதென்றும் அதற்கு மாத்திரமே சில தனி தத்துவங்களுண்டு என்றும் கருமம், மதம், மேல்லோக வாழ்வு, கடவுள், கடவுள் தண்டனை. மன்னிப்பு, சன்மானம் ஆகியவை சொந்தமென்றும் மனிதனுக்கே சில உயர்ந்த தத்துவங்கள்-கடமைகள் பிரார்த்தனைகள், முதலியவை உண்டென்றும் சொல்லுவதில் ஏதாவது அர்த்தமிருக்க இடமுண்டா? என்று பார்த் தால் இவைவெறும் கற்பனைகளென்றே விளங்கும். மற்றும் “கடவுளுக்கும்” மனிதனுக்கும் இருக்கும் சம்மந்தமும், பொறுப்பும் மற்ற ஜீவராசிகளுக்கு இல்லை என்று சொல்லமுடியுமா? என்பதும் விளங்கும். அதுபோலவே "பாவமும் புண்ணியமும் சொர்க்கமும் கடவுள் பதத்தை” அடையக்கூடிய தன்மையும் மற்ற ஜீவராசிகளுக்கு இல்லையென்று சொல்லமுடியுமா? என்பதும் விளங்கும். 

ஒரு பூச்சியின் செய்கைக்கு 'பாவம்' 'புண்ணியம்' உண்டானால் தான் ஒரு மனிதனின் செய்கைக்கும் பாவம் புண்ணியம் உண்டாகமுடியும். 

மனிதனுக்குள்ள பகுத்தறிவு என்பது கடவுளால் தனிப்பட்ட காரியத் துக்காகக் கொடுக்கப்பட்டது என்றால், ஒரு யானைக்குள்ள தும்பிக்கை யையும், ஒரு நாரைக்குள்ள நீண்ட மூக்கையும், ஒரு முள்ளம்பன்றிக்கிருக்கும் செதிள் முள்ளுகளையும், தேளுக்குள்ள கொடுக்கையும், பாம்புக்குள்ள விஷத்தையும் போன்றவைகளையெல்லாம் கடவுளால் தனிப்பட்ட காரியங்களுக்காக கொடுக்கப்பட்டது என்றுதானே சொல்லவேண்டும். ஆதலால் ஒரு யானைக்குத் தும்பிக்கை விசேஷ உறுப்பாகவும் நீண்ட அவயவமாகவும் இருப்பது போலவே மனிதனுக்கு 'பகுத்தறிவு'க்குள்ள நரம்புக்கூட்டும் மூளையின் பரிமாண அதாவது அதிக சிந்தனா சக்திக் குள்ள உறுப்புகள் என்பவை விசேஷ உறுப்பாகவோ, விசேஷ சக்தி யாகவோ இருக்கின்றதென்பதேயல்லாமல் அதற்கு மாத்திரம் ஒரு தனி விசேஷத்துவம் இல்லை என்பதே எனது அபிப்பிராயம். 

உதாரணமாக ஜீவப்பிராணிகளுடைய இந்திரியங்களின் விசேஷத்தை எடுத்துக் கொள்வோமானால் ஒரு எறும்புக்கு இருக்கும் மூக்கு மோப்பசக்தி ஒரு மனிதனுக்குக் கிடையாது. உதாரணமாக சர்க்கரையோ, பிஸ்கோத்தோ ஒரு பெட்டிக்குள் இருக்குமானால் அதை மனிதனால் மோப்பத்தின் மூலம் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் ஒரு சிறு எறும்பு கண்டுபிடித்துவிடும். அதுபோலவே பக்ஷிகளின் (கண்) பார்வை சக்தி ஒரு மனிதனுக்குக் கிடையாது. உதாரணமாக சமீப தூரத்தில் இருந்தும் மனித னுக்குத் தென்படாத ஒரு வஸ்துவானது பூமிக்குமேல் ஒரு மைல் இரண்டு மைல் உயரத்தில் பறக்கும் பக்ஷியின் மிகச்சிறிய கண்களுக்குத் தென்பட்டு அப்படீயால் அது தூக்கிச் செல்லப்படுகின்றது. மீனுக்கு இருக்கும் நீந்தும் சக்தி மனிதனுக்கு இல்லை. உடும்புக்கு இருக்கும் பிடித்துக்கொள்ளும் அவையவ சக்தி மனிதனுக்கு இல்லை. 

இதுபோலவேதான் ஒரு விஷயத்தில் மனிதனுக்குள்ள மூளை அவையத்தின் சக்தி மற்ற ஜந்துக்களுக்கு இல்லை என்று சொல்லவேண்டும். இந்த வித்தியாசங்களெல்லாம் அமைப்பில் ஜீவனுக்கு ஜீவன் மாறுபட்டி ருப்பதுபோன்ற ஒரு வித்தியாசமே தவிர, மனிதனுக்கு மாத்திரம் ஏற்பட்ட ஒரு தனித்தத்துவ உயர்குணம் என்று சொல்லிவிட முடியாது. 

“பகுத்தறிவு என்பது மனிதனுக்கு மாத்திரந்தான் உண்டு: அது தனிக் காரியத்திற்காகக் கடவுளால் கொடுக்கப்பட்டது” என்று சொல்லப்படுமா னால் பகுத்தறிவு இருக்கின்றது என்கிற காரணத்திற்காக மனிதன் எந்த விதத்தில் மேலான நிலையில் உள்ளவனாய் இருக்கிறான் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். மற்ற “பகுத்தறிவில்லாத” ஜீவனுக்கு உள்ள என்ன "குறைகள்” பகுத்தறிவுள்ள மனிதனிடம் இல்லாமல் இருக்கிறதைக் காண்கின்றோம்? 

ஆகாரம், நித்திரை, ஆண் பெண் சேர்க்கை ஆகிய தேவைகளில் மற்ற ஜீவன்களிடமுள்ள தேவைகளே மனிதனிடமும் காணப்படுகின்றன; இன்னும் பேசப்போனால் மற்ற ஜீவன்களைவிட அதிகமாகவும் காணப்படு கின்றன. ஆசை என்கிற ஒரு “கெட்ட” குணம் மற்ற ஜீவன்களைவிட மனித ஜீவனிடம் அதிகமாகவே காணப்படுகின்றது. அதிருப்தி என்கிற “கெட்ட” குணம் மனிதனிடமே அதிகமாய் இருக்கின்றது. கவலை என்கின்ற “கெட்ட” குணமும் மனிதனுக்கே அதிகமாய் உண்டு. தன் இனத்தை அடிமைப்படுத்தி அதைக் கொடுமைப்படுத்திவாழும் கெட்ட குணம் மனிதஜீவனிடத்திலேயே அதிகமாய் இருந்துவருகின்றது. மற்றஜீவன் களுக்கு உள்ளது போன்ற வஞ்சகம் ஏமாற்றம் முதலிய குணங்கள் மனிதனி டத்திலேயே அதிகமாய் இருந்துவருகின்றன. தனக்குத் தெரியாததையும், புரியாததையும் பற்றி நம்புதல், பேசுதல், நம்பச்செய்தல் முதலிய மூடத் தன்மைக்குணம் மனித ஜீவனிடத் திலேயே அதிகமாய் இருந்துவருகின்றது. நம்பிக்கைக்கும். நடவடிக்கைக்கும் சம்மந்தமில்லாத குணம் மனித ஜீவனி டமே இருந்து வரு கின்றது. ஒரே விஷயத்தை இரண்டுவிதமாய் நம்பும் சுயபுத்தியற்ற தன்மையும் மனிதனிடமே இருந்து வருகின்றது. 

இதுபோன்ற எத்தனையோ கெட்ட குணங்கள் மனிதஜீவன் தனது பகுத்தறிவின் பயனாகவே உடைத்தாயிருக்கின்றது. ஆகையால் பகுத்தறி வின் “மேன்மையால்” மனித ஜீவன் சிறந்தது என்று எப்படி சொல்லிக் கொள்ளமுடியும் என்பதே நமது கேள்வியாகும். மேலும், மேற்கண்ட காரணங்களாலும், மற்றும் பல காரணங்களாலும் மனிதஜீவன்களில் பெரும் பான்மை யானவை மற்ற ஜீவராசிகளைவிட இழிவுத்தன்மையுடையது என்பதும் நமது அபிப்பிராயமாகும். "ஜாதியின்” பேரால் உயர்வு தாழ்வு "மதத்தின்” பேரால் வேற்றுமை உணர்ச்சி, "தேசத்தின்” பேரால் குரோதத் தன்மை முதலான இழிகுணங்கள் மனிதனிடமே அதிகமாய் காண்கிறோம். மற்றும் "கடவுளின்” பேரால் மேல்கீழ்நிலை முதலாகிய அயோக்கியத் தன்மைகள் மனித ஜீவனிடமே உண்டு. பகுத்தறிவின் காரணமாக மனித ஜீவன் உயர்ந்தது என்று சொல்லவேண்டுமானால், மேற்கண்ட கெட்ட-தீய இழிவான அயோக்கியத் தனமான குணங்கள் என்பவைகள் எல்லாம் மனிதனிடம் இல்லாமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மற்ற “பகுத்தறிவில்லா” ஜீவராசிகளைவிட மனிதஜீவன் மூளை விசேஷம் முதலிய அவயவத்தை நன்மைக்காகப் பிரயோகித்துக்கொண்ட ஜீவன் என்று சொல்லப்படும். அஃதில்லாத நிலையில் எவ்விடத்திலும் மனிதஜீவன் மற்ற ஜீவபிராணிகளை விட உயர்ந்ததல்ல என்பதோடு பலவிதத்திலும் தாழ்ந்தது என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது. 

"நகரதூதன்” 

குடி அரசு - கட்டுரை – 03.09.1933

Read 20 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.